Monday 17 May 2010

நரியா..? நரியின் வாலா..? எது வேண்டும்?


எல்லோருக்கும் விளங்கும் உலகப் பொதுமொழி சித்திரம் என்று கூறுவார்கள். ஒரு பிரச்சனையை உலகம் சரியாக விளங்க வேண்டுமானால் அதை தெளிவான சித்திரமாக வரைய வேண்டும்.

உள்ளத்தில் எதையோ மறைத்து வைத்துக் கொண்டு, ஒவியரை அழைத்து வந்து நம் விருப்பத்தை வரையும்படி கூறினால் உண்மையான ஓவியத்தை வரைய முடியாது.

எழுபதுகளில் நான் தொண்டைமானாறு மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக இருந்தபோது ஒரு சம்பவம் நடைபெற்றது.

ஐந்தாம் வகுப்பிற்கான ஓவியப் பரீட்சையில் நரியை வரையும்படி, ஆசிரியர் கூறியிருந்தார். அவர் தன் உள்ளத்தால் விரும்புவது எது என்பதை விபரமாகச் சொல்லாமல் சகட்டுமேனிக்கு நரியை வரையும்படி கூறிவிட்டார். மாணவர்களும் வரைந்து கொடுத்தார்கள்.

ஓவியங்களைப் பார்த்தபோது, நரி போல, ஓநாய் போல, நாய் போல, கீரி போல பல தோற்றங்களைக் காண முடிந்தது. அந்த ஓவியங்களைப் பார்த்து நரி என்று மற்றவர்கள் ஒப்புக் கொள்ளக் கூடிய தன்மை வெளிவரவில்லை.

ஆனால்..

ஒரு மாணவன் மட்டும் வெறும் வாலை மட்டும் வரைந்திருந்தான்.

அவனை அழைத்த ஆசிரியர் , நரி எங்கே..? , என்று கேட்டார்.

அதற்கு அவன், நரி கடதாசிக்கு வெளியே நிற்கிறது.. ! , என்றான்.

அவன் வரைந்தது சரியா இல்லை தவறா… இதுதான் சர்ச்சை..

சரி என்றால் அடுத்து வரும் பாPட்சையில் எல்லா மாணவரும் வால்களை மட்டும் வரைந்துவிட்டு போய்விடுவார்கள்.

தவறு என்றால் ஆசிரியர் முன்னரே இப்படி வாலை மட்டும் வரையக் கூடாது என்று கூறியிருக்க வேண்டும்.

எனவே ஆசிரியர்கள் கூட்டத்திற்கு விவகாரம் வந்தது.. பலத்த விவாதத்திற்குப் பிறகு அந்த ஓவியத்தில் ஒரு தவறு இருக்கிறது என்று ஆசிரியர்கள் முடிவு செய்தார்கள்.

நரியின் வாலும், ஓநாயின் வாலும், சில மரநாய்களின் வாலும், மேலும் சில வளர்ப்பு நாய்களின் வால்களும் தோற்றத்தில் ஒரேமாதிரியாக இருக்கும். மாணவன் நரியை வரைந்ததாகக் கூறினாலும் அதைப் பார்க்கும் இன்னொருவர் கடதாசிக்கு வெளியால் நிற்பது ஓநாய் என்று சொன்னால் என்ன செய்வது.. ஆகவேதான் மாணவன் வரைந்தது தவறு என்று முடிவு செய்தார்கள்.

மாணவனை அழைத்து காரணத்தைச் சொல்லி, அது தவறான ஓவியம் என்று ஆசிரியர் சொன்னார்.

மாணவன் சிரித்தான்..

, தலைப்பு தராத பட்சத்தில் நீங்கள் சொல்வது சரி.. ஆனால் நரியை வரை என்று கேட்டபின் வரையப்பட்ட வால்தான் இது.., என்றான்.

உணர்ச்சி வசப்பட்ட ஆசரியர் அவனுக்கு 90 புள்ளிகளை வழங்கினார்..

ஆனால் அத்தோடு விவகாரம் முடியவில்லை… சர்ச்சை தொடர்ந்தது… கேள்வி தவறாக இருந்ததே தவறான பதில் வரக்காரணம் என்ற முடிவிற்கு கடைசியாக ஆசிரியர்கள் வந்தார்கள்.

கள்ளங்கபடமில்லாத ஒரு சிறு பிள்ளையிடமிருந்தும், கள்ளங்கபடமில்லாத பரம்பொருளிடமிருந்தும் நமக்கு வேண்டியது கிடைக்க வேண்டுமானால் கேள்வியைத் தெளிவாகக் கேட்க வேண்டும் என்று அதிபர் கூறினார். பின் அதை ஆசிரியர்களுக்கு விளக்க, அடுத்த வெள்ளி பிரார்த்தனை நடந்தபோது ஓர் உபகதையும் கூறினார்.

பாண்டவர்கள் இறைவனிடம் வெற்றி வேண்டுமெனக் கோரினார்கள். அக்கோரிக்கை இறைவனுக்கு சரியாகப் புரிய வேண்டுமானால் ஒளிவு மறைவற்ற உள்ளம் வேண்டுமெனக் கூறினான் கண்ணன்.

அதை அறிய அவர்களை ஒரு கந்தர்வனின் அபூர்வத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே உள்ள மாமரத்தில் உள்ள கனியைப் பறித்து கீழே போடும்படி கூறினான்.

பின் நீங்கள் ஒவ்வொருவராக சென்று மாமரத்திடம் உங்கள் உள்ளத்தில் உள்ள இரகசியங்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றிக் கூறுங்கள், மாம்பழம் மேலே கிளம்பி மறுபடியும் மரத்தில் ஒட்டிக் கொள்ளும் என்றான்.

ஒவ்வொருவராகச் சென்று உள்ளத்தைத் திறந்து உண்மைகளைக் கூறினார்கள்.. பழம் தரையில் இருந்து மேலே மேலே எழுந்தது..

கடைசியாக பாஞ்சாலி சென்று உண்மைகளைக் கூறினாள், அவள் கூறக்கூற மேலும் உயர்ந்து சென்ற மாம்பழம் ஒரு கட்டத்தில் ஒட்டாமலே அந்தரத்தில் நின்றது..

, பாஞ்சாலி நீ ஏதோ ஓர் உண்மையை மறைக்கிறாய்.. உள்ளத்தைத் திறந்து உண்மையைச் சொல்லாதவரை பழம் ஒட்டாது.. உள்ளத்தை வெளிப்படையாகத் திறக்காத ஒருவரின் கோரிக்கையை இறைவனால் சரிவர நிறைவேற்ற முடியாது என்றும் கண்ணன் கூறினான்.

கடைசியாக தயக்கம் நீங்கிய பாஞ்சாலி , பஞ்சபாண்டவராகிய ஐந்து அண்ணன் தம்பிகளுக்கும் நான் ஒருத்தியே மனைவியாக இருந்தாலும், என் உள்ளம் அதிகம் விரும்புவது மூன்றாவதாகப் பிறந்த அர்ச்சுனன் ஒருவனைத்தான் என்று கூறினாள்..

உடனே மாங்கனி மரத்தில் ஒட்டிக் கொண்டது..

அக்கணமே மற்றய நான்கு கணவர்களும் இதுவரை விருப்பமில்லாத ஒருத்தியை மனைவியாக்கிப் புணர்ந்துவிட்டோமே என்பதை உணர்ந்து நாணமடைந்தார்கள்.

உள்ளத்தில் இருளை வைத்துக் கொண்டு இயற்கையிடம் எதையும் கேட்கக் கூடாது என்பதை கண்ணன் பாண்டவருக்கு உணர்த்திய இடம் இது. அதுபோல உள்ளத்தை தெளிவாக வைக்காமல் ஆசிரியர்கள் கேள்வி கேட்டால் நரிக்குப் பதிலாக நரி வாலே மாணவரிடமிருந்து வரும் என்று முடித்துக் கொண்டார் அதிபர்.

இந்த இரண்டு கதைகளையும் புதுமாத்தளன் என்ற புதிய பாத்திரத்தில் ஊற்றுவோம்..

அன்று..

ஆயுதம் ஏந்திய புலி வீரர்கள், உள்ளத்தைத் திறந்து தமிழீழமே தீர்வு என்று சொன்னார்கள்.. அதற்காக உயிரும் கொடுக்கலாம் என்றார்கள்… உயிரும் கொடுத்தார்கள்.. அவர்கள் கேட்டது சரி..

ஆனால் அவர்கள் கேட்டது கிடைக்கவில்லை.. ஏன் ?

அவர்கள் ஈழத்தை தமக்காகக் கேட்கவில்லை மக்களுக்காகவே கேட்டார்கள்..

புலிகளைப் போல மக்களும் உள்ளத்தை திறந்திருந்தால் ஈழம் இல்லாவிட்டாலும் மக்கள் விருப்பிற்கு அமைவாக ஏதோ ஒன்றை பரம்பொருள் வழங்கியிருக்கும்.

ஆனால் மக்கள் எதையும் உறுதியாகக் கேட்கவில்லை என்பதை அவர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடு சென்ற காட்சி தெளிவாக விளக்கியது..

உயிர் எமக்குப் பெரிதாகப்பட்டது அதனால் புலம் பெயர்ந்தோம்.. அதை உளம் திறந்து புலகளிடம் சொல்ல அஞ்சினோம்.. சொல்லியிருந்தால் அவர்கள் ஏதோ ஒரு தீர்வுக்கு வந்திருப்பார்கள்.

புலிகளை விடுங்கள் நமது கருத்தை உலகத்திடமாவது சரிவர முன் வைக்த்தோமா.. இல்லை..

நாம் யாருக்கோ எதற்கோ அன்றும் தொடர்ந்து இன்றும் பயப்படுகிறோம்..

இதற்கு இன்னொரு உதாரணம்..

டென்மார்க்கில் நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு நண்பர் ஒருவர் வாக்களித்து விட்டு வந்தார்..

நீங்கள்தானே தமிழீழத்திற்குக் குறைவான, சாத்தியமான தீர்வு வந்தாலே போதும் என்று கூறுகிறீர்கள்.. பின் எதற்காக தமிழீழமே தீர்வு என்ற கருத்திற்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டேன்..

என்ன செய்வது.. போகாவிட்டால் தமிழ் ஈழத்திற்கு எதிரானவன் என்று யாராவது களங்கம் கற்பித்துவிடுவார்கள் அதனால் வாயைப் பொத்திக் கொண்டு வாக்களித்தேன் என்றார்.

மறுநாள் 98 வீதத்திற்கு மேலானவர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவு என்று வெற்றிச் செய்தி ஊடகங்களில் வந்தது..

ஆனால் உள்ளத்தைத் திறந்து வாக்களித்தவர்களை இறைவனுக்கு மட்டுமே தெரியும்..

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நடாத்தியவர்களையோ அல்லது அந்தத் தீர்மானத்தை விமர்சிப்பதோ நமது நோக்கம் இல்லை. இத்தனைக்குப் பிறகும் நாம் உள்ளத்தைத் திறக்க முடியாதவர்களாகவே இருக்கிறோம் என்பதை விபரிக்கவே இந்த உதாரணம்.

புதுமாத்தளனுக்கு ஒரு புது முடிவு வேண்டுமானால், யாருக்கும் பயப்படாது இனிமேலாவது வெளிப்படையாகப் பேசுங்கள்.. பாஞ்சாலிபோல தயங்காது உள்ளத்தைத் திறவுங்கள்…

இலங்கைத் தீவும் ஒரு மாங்கனிதான்..

தீர்வின்றித் தொங்கும் அந்த மாங்கனியை ஒட்டவைக்க மருந்து கண்ணீரல்ல, உள்ளம் திறப்பதேயாகும்.

உள்ளம் திறக்காதவருக்கு பேரருளின் உரிய பதில் ஒரு போதும் கிடைக்காது..

உள்ளத்தைத் திறக்காமல் அழுவதால் தீர்வு கிடைக்குமென்றால் உலகம் முழுவதும் அழுகுரலே கேட்கும்..

No comments:

Post a Comment