Saturday 15 May 2010

கோடி தமிழா உன் கோழை வாழ்வு போதும்..


அலவாங்கிற்குப் பயந்து வீடு கட்டாமல் இருக்கும் இனம் எதுவென்று ஆராய்ச்சி செய்ய ஓர் அளவுகோல் இருக்கிறது..

உலகத்தில் ஆறு கோடி மக்கள் இருந்தும் தமக்கான சுய நிர்ணய உரிமையுடன் வாழ்வதற்குரிய நாடில்லாத இனமாக இருப்பது தமிழினம்தான்.

வீட்டைக் கட்டிப்பார் அதுபோல கல்யாணத்தைக் கட்டிப்பார் என்று கூறுவார்கள், அதுபோல உனக்கான நாட்டைக் கட்டிப்பார் என்று யாரும் கேட்பதில்லை ஏனென்றால் அது அவ்வளவு இலகுவான காரியமல்ல..

வீட்டைக் கட்டுவதற்கு பணம், உபகரணங்கள், ஆளணிகள் என்று ஏகப்பட்ட விடயங்கள் தேவை. ஆனால் அதை உடைப்பதற்கு ஓர் அலவாங்கு போதும்.

அழிப்பது இலகு ஆக்குவது மிகவும் கடினம்..

புதுமாத்தளனில் நாம் ஆக்கசக்தியாகவும், எதிரிகள் அலவாங்கு தூக்கிய அழிவு சக்தியாகவும் இருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டியதில்லை..

அன்று..

வள்ளுவர் போன்ற பெரும் மகான்கள் தோன்றி நீ உன் கையில் அலவாங்கை எடுக்காதே.. என்று போதித்தார்கள்..

உனக்கு வீடில்லாவிட்டாலும் மற்றவன் வீடுகட்டி வாழ அனுமதிக்கும் இனமாக நீ இருக்க வேண்டும் என்றும் போதித்தார்கள்..

தமிழ்மொழியில் கடந்த ஐயாயிரம் ஆண்டுகளாக நல்லறிவூட்டும் அறிஞர்கள் மற்றவர் வாழ வேண்டுமென வழிவிட்டு, தாம் வறுமையில் வாழ்ந்த பெருமக்களாகவே இருந்தார்கள்.

இதற்கு ஓர் உதாரணம்..

தம்பியாக இருந்த இளங்கோவடிகள் சேரநாட்டின் அரசனாக வருவான் என்று அவனுடைய ஜாதகம் கூறுவதாக அரண்மனைச் சோதிடர்கள் கூறினார்கள்..

அவனுடைய அண்ணனான சேரன் செங்குட்டுவனுக்கு சவாலாக வர இந்தியாவில் வேறு யாருமே கிடையாது என்றும் கூறினார்கள்..

அவ்வளவுதான், இளவரசர் பட்டத்தைத் துறந்து, காவிதரித்து புத்தமதத் துறவியானார் இளங்கோவடிகள்..

அண்ணனுக்கு போட்டியாக அல்ல அண்ணனுக்கு அடுத்ததாகவும் அரசனாகமாட்டேன் என்ற உறுதி மொழியை அவர் எடுத்தார்..

அதன் பின்னர் வட இந்தியருடன் போர் புரிந்து கனகவிஜயர் தலையில் கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு கோயில் கட்டினான் அவர் அண்ணனான சேரன் செங்குட்டுவன். அவன் எடுத்த விழாவில் கடல்சூழ் இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்து கொண்டான் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

இங்கே கோயில் கட்டியது என்ற சொல்லே முக்கியமாகும். மற்றவர்கள் நாட்டைக் கட்டவும், வீட்டைக் கட்டவும், கோயிலைக்கட்டவும் தடைபோடாத இனமாக இருக்க வேண்டும் என்பதே ஆன்றவிந்த தமிழ் அறிவாக இருந்தமைக்கு இளங்கோவடிகள் ஓர் உதாரணம், இதுபோல எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஜின்னா பாகிஸ்தான் தனிநாடாக வேண்டுமென உறுதியாக நின்றார். புதிய நாடு உருவானது.

ஆனால் சோழப்பேரரசையே உருவாக்கி சாதனை படைத்த தமிழன் வட இந்தியர் நாட்டை அமைக்கட்டும், பாகிஸ்தானியர் நாட்டை அமைக்கட்டும், உலக யுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் போன்ற சில இலட்சம் மக்கள் கூட நாட்டை அமைக்கட்டும் ஆனால் கோடி கோடியாகக் ஜனத்தொகை கொட்டிக் கிடக்கும் தமிழனுக்கு ஒரு தனிநாடு வேண்டுமென கேட்காமல் அமைதியாக இருந்தனர்.

மற்றவன் வீட்டை அழிக்க அலவாங்கைத் தூக்காத இனம் என்று அகிலத்திற்கும் உரைத்தனர்..

இந்தியாவை விடுங்கள்.. நமது இலங்கையில் என்ன நடந்தது..

இலங்கையின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சேர். பொன். இராமநாதன் இங்கிலாந்து சென்று பேசிவிட்டு வந்தபோது, அவரை குதிரை வண்டியில் இருத்தி, குதிரைகளை அகற்றிவிட்டு தாமே இழுத்துச் சென்றார்கள் சிங்களத் தலைவர்கள். இராமநாதன் சிங்களவருடன் இணைந்து நாடற்று வாழ தமிழருக்கு வழிகாட்டி சிங்களவர் கட்டிய வீட்டில் அலவாங்கு போடாமல் அமைதி காத்தார்.

மற்றவர்கள் நலமாக வாழ நாம் தோள் கொடுப்போம் என்ற பழந்தமிழரின் பண்பார்ந்த கொள்கை நாடுள்ள இனங்களால் புரிந்து கொள்ளப்படவில்லை.

எல்லோரும் வாழ வழிவிட்ட தமிழன் நெருப்பில் எரிந்தான்..

வேறு வழியின்றி தமிழனுக்கு ஒரு நாடு வேண்டுமென்று ஈழ மண்ணில் சில இளைஞர்கள் புறப்பட்டார்கள்..

அப்போதுதான் ஓர் உண்மை நமக்குப் புரிந்தது..

தாம் நாடுகாண வழிவிட்ட தமிழனுக்கு அதே உலக நாடுகள் பயங்கரவாதிப் பட்டம் கட்டின.. அதையே காரணம்காட்டி அலவாங்குகளை ஏந்தியபடி தமிழன் கட்டிய நாட்டை குத்தி அழித்தன.. கட்டப்பட்ட கட்டிடத்தின் ஈரம் காயமுன்னர் இடித்துவிடுவோமென அவசரப்பட்டு, ஈரமில்லாத இதயம் கொண்டோர் இணைந்து நின்று நம் கண் முன்னே.. இடித்தார்கள்.

வீடு கட்டியவர்கள் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார்கள். கட்டிய வீடு புதுமாத்தளனில் அத்திவாரத்தோடு கிளறப்பட்டு அலங்கோலமாகக் கிடக்கிறது.

இப்போது நாம் என்ன செய்வது.. அழுவதா ?

இல்லை ஆளையாள் துரோகிப்பட்டம் கட்டி வேரோடு அழிவதா ?

மாற்று வழி இல்லாமல் மகிந்த அரசுடன் சேருவதா..?

இல்லை நாடுகடந்த அரசை அமைப்பதா..?

இப்படி பல கேள்விகள் எழும்..

எல்லாக் கேள்விகளையும் ஓரமாக வைத்துவிட்டு, நாம் கொஞ்சம் பின்நோக்கிப் பார்க்க வேண்டும்..

தமிழ் அறிஞர்கள் சொன்னது சரியா இல்லை தமிழ் தலைவர்கள் செய்தது சரியா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குற்றம் ஒன்றும் பாராட்டி திரிய வேண்டாம் என்று உலகநீதி சொல்லுவதை மனதில் வைத்து, நமது கொள்கைகளை இன்னொரு தடவை சீர் தூக்க வேண்டும்.

உலகத்தில் மிக மிக பழைய கலாச்சாரம் கொண்டது தமிழினம் அதனுடைய தத்துவங்கள் மிகச் சிறந்த தத்துவங்கள்தான் ஆனால் காலம் மாறிவிட்டது. அக்கருத்துக்கள் உலகம் மாறிய மாற்றத்திற்கு அமைவாக புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு அமைவான தமிழர் அரசியல் சமுதாய வாழ்விற்கான பொதுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

உலகளாவிய தமிழர்கள் அதுபற்றி சிந்திக்க வேண்டும். செம்மொழி மாநாடு நடாத்துவது போல தமிழர் அரசியல், சமுதாய எதிர்கால வாழ்விற்கான புதிய நெறி அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

அதற்கு அமைவாக உலகளாவிய தமிழினம் கருமங்களை முன்னெடுக்க வேண்டும். உயர் தமிழ் கருத்துக்கள் வடஇந்தியரின் பிற்போக்குக் கருத்துக்களோடு கலந்து சீரழிக்கப்பட்டிருக்கும் இடங்களை முதலில் துல்லியமாக, உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

இதற்கு ஓர் உதாரணம்..

சாதிக்கொடுமை முற்றாக அழிக்கப்பட வேண்டும், அது தமிழர் கலாச்சாரமல்ல என்பதை தெளிவாக முன் வைக்க வேண்டும். சாதிக் கொடுமையே ஈழத்தில் முப்பதுக்கு மேற்பட்ட சாதி இயக்கங்கங்களாகத் தோன்றி ஆளையாள் காட்டிக் கொடுத்து அழிவில் தள்ளியதை நாம் கண் முன் பார்த்துவிட்டோம்.

இது ஒரு வட இந்தியத் தவறு, இதுபோல மேலும் எழுத எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.

இனி..

ஈழத் தமிழர்கள் அடுத்த ஐந்து வருடங்களுக்கு நகர வேண்டிய நகர்வுகள் என்ன..

அதற்கடுத்த பத்தாண்டுத் திட்டமென்ன…

இருபத்தியோராம் நூற்றாண்டுக்காக அவனுடைய பொதுமைத் திட்டமென்ன..

அதை எட்டித்தொட அவன் உருவாக்க வேண்டிய கட்டுமானங்கள் எவை..?

ஆறு கோடி தமிழரின் தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அந்தத் திட்டத்தை முதலில் வரைய வேண்டும். நாம் ஆளையாள் இரகசியமாகக் கூடி, நமக்கு வேண்டியவர்களுக்கு இருட்டறையில் பதவி கொடுத்துவிட்டு ஈழப் பிரச்சனைக்கு இதுதான் தீர்வு, இதற்கு இணங்காதவன் துரோகி என்றபடி தெருவிற்கு வரக்கூடாது.

விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் சுற்றிவிட்டு வீரம் பேசக்கூடாது..

அழிவிற்காக அழுதோம்.. இனி அழிவிற்குப் பின்னும் மூடர்களாக இருக்கிறார்களே என்பதற்காகவும் அழக்கூடாது..

நாம் இந்த வாழ்வை சுமப்பதற்கு என்ன அர்த்தம்..

அழுவதா..?

மற்றவருக்கு பயப்படுவதா.. ?

இல்லை துரோகிப்பட்டத்திற்கு பயந்து பேடிகளாக இருப்பதா ?

மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் தானாகச் சிந்தித்து வீதிக்கு வரவேண்டும்..

இனிமேலாவது கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்யாய் தமிழ் வீரா.. !

புதுமாத்தளன் சோகமல்ல புலிபோல பாய்வதற்கான வீர வலுவை உனக்குத் தந்துள்ளதை மறந்துவிடாதே..

துரோகிப்பட்டம் என்ற அலவாங்கை தூக்கி, நீ கட்டும் வீட்டை உடைக்க வரும் துன்மார்க்கர்களை தொலைத்துவிட்டு துணிந்து நில்..

அற்பர்களின் அலவாங்குகளுக்குப் பயந்து அடிமையாக வாழப்போகிறாயா..?

திருடரும், மொள்ளமாறிகளும், முடிச்சவிழ்ப்போரும் உன் முதுகில் வண்டியோட நீ கோழையாக வாழப்போகிறாயா ?

புதுமாத்தளனுக்குப் பிறகும் உனக்கொரு கோழை வாழ்வு வேண்டுமா..?

வீரத்தமிழா உன் கொள்கைகளை மாற்றி விழித்தெழு..

விடிவு உன் வீட்டு வாசலில் விழும்..

No comments:

Post a Comment